ஜெ. வாங்கிகொடுத்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உயிரிழப்பு.. அஞ்சலிக்குப்பின் அடக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
Recommended Video
திருவண்ணாமலை: ஜெயலலிதா வாங்கிகொடுத்த அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. பக்தர்களின் அஞ்சலியை தொடர்ந்து யானை ருக்குவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 1995ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 வயதுடைய ஒரு பெண் யானையை வழங்கினார். அந்த யானைக்கு ருக்கு என பெயரிடப்பட்டது.
தற்போது 30 வயதான இந்த யானை கடந்த 23 ஆண்டுகளாக அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற உற்சவங்களில் பங்கேற்று தொண்டாற்றி வந்தது.
நாயும் குரங்கம் சண்டை
இந்நிலையில் நேற்று கோவிலில் இருந்து யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ருக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது அங்கு நாயும் குரங்கும் சண்டை போட்டதைக் கண்டு ருக்கு மிரண்டு ஓடியது.
கண்ணில் பலத்த காயம்
அப்போது அங்கிருந்த இரும்பு தடுப்புச்சுவற்றில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ருக்குவுக்கு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாரடைப்பு
கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு ருக்குவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து, யானைக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் யானை ருக்குவுக்கு சிகிச்சையளித்தனர்.
நள்ளிரவில் உயிரிழப்பு
ஆனாலும் ருக்கு உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கோயிலின் 5-ம் பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த யானை ருக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு உயிரிழந்தது.
பக்தர்கள் சோகம்
யானை ருக்கு அனைத்து புத்துணர்வு முகாமிலும் பங்கேற்றுள்ளது. ருக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ருக்கு உடல் அடக்கம்
கோவில் இணை ஆணையர் உட்பட அதிகாரிகள் கோவில் ஊழியர்கள் யானைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பக்தர்களின் அஞ்சலிக்குப் பின் கோவில் சுற்றுச்சுவர் பக்கத்திலேயே ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.