பேராசிரியர் ஜெயராமன் கைதை கண்டித்து மறியல்... நன்னிலத்தில் 100 பேர் கைது!
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை விடுவிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்னிலம் : ஓஎன்ஜிசி திட்டத்தை எதிர்த்தும் பேராசிரியர் ஜெயராமன் கைதை கண்டித்தும் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் விளை நிலங்களுக்கு நடுவே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பேராசிரியர் ஜெயராமன். ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜெயராமன் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அண்மையில் அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட நிலையிலும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தொடர்ந்து போராடி வருகிறார் பேராசிரியர் ஜெயராமன்.இன்று காலையில் மாவட்ட ஆட்சியரிடம் ஓஎன்ஜிசிக்கு எதிராக மனு கொடுக்க வந்த போது பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உள்பட 100 பேர் திரண்டுள்ளனர்.
போராட்டத்தை தூண்டியதாக கைது
அப்போது ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சித்ரா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நன்னிலம் பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டங்களில் போராட்டம்
இதே போன்று நெம்மேலி, மாப்பிள்ளை குப்பம், மனவாளன் பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பொதுமக்கள் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போராட்ட களமாகியுள்ள திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் எங்குமே ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நன்னிலம் உள்ளிட்ட கிராமங்களில் மீண்டும் வெடித்துள்ள போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்.
ஓஎன்ஜிசியே வெளியேறு
ஓஎன்ஜிசியே வெளியேறு, நிலத்தடி நீர்மட்டத்தை மாசுபடுத்தாதே உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டங்களின் பல்வேறு கிராமங்களில் மீண்டும் வெடித்துள்ள ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தால் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.