திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின் முன் உள்ள சவால்.. திமுக வேட்பாளர் யார்?
திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தல் வர உள்ளது.
தற்போதைய பலம்
தமிழக சட்டசபையின் பலம் 234 ஆகும். தற்போது அதிமுகவிற்கு 116 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 மற்றும் சுயேச்சை வேட்பாளருக்கு 1 என்றுள்ளது. 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எம்எல்ஏ டிகே போஸ் மற்றும் கருணாநிதி மறைவு காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.
ஸ்டாலினின் தனி தேர்தல்
இந்த தேர்தல் ஸ்டாலின் கருணாநிதி இல்லாமல் தனியாக சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். ஸ்டாலின் அதற்குள் திமுக கட்சியின் தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகிறது. இதனால், இந்த தேர்தல் அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதியிலும் கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
முக்கியமான தேர்தல்
இந்த நிலையில்தான் திருவாரூர் தேர்தல், திமுகவிற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றி பெறுவதை விட, கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற நினைக்கிறது. சட்டமன்றத்திலும் திமுகவிற்கு அது பலத்தை கொடுக்கும். இதனால் இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது.
உதயநிதியா போட்டி
இந்த நிலையில்தான் திருவாரூர் தொகுதியில் ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி என்று திமுக தரப்பு மறுத்துள்ளது. முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு இந்த தொகுதியில் வாய்ப்பளிக்க இருப்பதாக திமுக கூறியுள்ளது. கருணாநிதிக்கு நெருக்கமான ஒருவருக்கு சென்டிமென்டாக வாய்ப்பளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.