காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பு விவகாரம் : வெடித்தது தமிழக விவசாயிகள் போராட்டம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Recommended Video
திருவாரூர் : காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீரின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் குறைத்துள்ளது. இதன் பிறகு இந்த வழக்கில் எந்த வித மேல்முறையீடும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்கப்பட்ட உத்தரவை விட, தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
மேலும், கர்நாடகத்திற்கு 14 டிஎம்சி கூடுதலாக வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருப்பதாகவும், முறையான வாதங்களைத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக்கத் தவறிவிட்டதாகவும் கூறி திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், தற்போதைய அரசுக்கு தமிழக விவசாயிகள் மீதும், காவிரி நதி நீர் விவகாரத்திலும் எந்த அக்கறையும் இல்லை. அதனால் தான் தமிழகத்திற்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து அதிருப்தி அதிகரிப்பதால், தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கலாம் என்பதால் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.