ஆடி வெள்ளி.. திருவாரூர் கோவிலில் பொங்கல், புளியோதரை பிரசாதம்.. 250 பேருக்கு வாந்தி, மயக்கம்!
பிரசாதம் சாப்பிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருவாரூர்: திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 250 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருவாரூர் அருகே உள்ள கிராமம் குவளைக்கால். இங்குள்ள அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
திடீரென வாந்தி
இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. வழிபாடுகள் முடிவடைந்ததையடுத்து, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனை வாங்கி சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென வாந்தி வந்தது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதில் கிட்டத்தட்ட அந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
5 நடமாடும் மருத்துவ குழு
இதனால் கிராம மக்கள் அனைவரும் பீதியும் பதட்டமடைந்தனர். உடனடியாக 5 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அதில் 35 பேர் மேல்சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆறுதல்
இந்நிலையில் பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் உடல்நலம் குறித்து அவர்களிடமும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.
குடிநீர் காரணமா?
பக்தர்கள் மயக்கமடைந்து விழுந்தது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியபோது, பிரசாதம் சாப்பிட்டுதான் மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது கோயிலில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் காரணமாக இருக்குமா என விசாரித்து வருவதாக தெரிவித்தனர். அதற்காக பிரசாதத்தையும், தண்ணீரையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், ஆய்வின் முடிவில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன என தெரிய வரும் என கூறினர்.