மீண்டும் அவதூறு வழக்கு... தப்பி ஓடி தலைமறைவாகிறாரா நாஞ்சில் சம்பத்?
நாஞ்சில் சம்பத் மீது திருவாரூர் போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர்: முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை அவதூறாக பேசியதாக தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக அணிகள் இரண்டாக பிளவுபட்ட நிலையில் ஈபிஎஸ் அணியை படுமோசமாக ஒருமையில் விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். பாஜகவினரையும் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சிக்க அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது.
பின்னர் நாஞ்சில் சம்பத் மீது தமிழகம் முழுவதும் பல இடங்களில் புகார் கொடுக்கப்பட்டன. வழக்குகளும் தொடரப்பட்டன. இதனால் எந்த நேரத்திலும் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படுவார் என்கிற நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்து சிறிது காலம் மீடியாக்கள் கண்ணில்படாமல் நாஞ்சில் சம்பத் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் திருவாரூரில் அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை அவதூறாக பேசினார் நாஞ்சில் சம்பத் என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் மீது திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போதுதான் வெளியே வந்த நாஞ்சில் சம்பத் மீது மீண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் கிடைக்கும் வரை மீடியாக்கள் கண்ணில்படாமல் இருப்பார் என்றே தெரிகிறது.