வயது 44.. சிறைவாசம் 56 முறை.. மறுபடியும் 3 ஆண்டு சிறை.. திருந்தாத வெள்ளியங்கிரி!
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த வெள்ளியங்கிரிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையை திருப்பூர் கோர்ட் விதித்துள்ளது. இது முக்கியமில்ல, 44 வயதுக்காரரான வெள்ளியங்கிரி இதுவரை 56 முறை சிறைக்குப் போய் திரும்பியவர் என்பதுதான் விசேஷமே.
மோட்டார் பைக் திருடிய வழக்கில் தற்போது 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார் வெள்ளியங்கிரி.
திருப்பூர், பல்லடம் சாலையில், அவிநாசியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நிறுத்தியிருந்த மொபட் சமீபத்தில் திருட்டு போனது. அதற்கு அடுத்த நாள் வீரபாண்டியில் குணசேகர் என்பவரின் பைக்கும் திருட்டுப் போனது.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்லடம் சாலையில் வசித்து வரும் வெள்ளியங்கிரி (44) என்ற பழைய குற்றவாளி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்தான் பைக்குகளைத் திருடினார் என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு, திருப்பூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நடுவர் வேலுச்சாமி, வெள்ளியங்கிரிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வெள்ளியங்கிரிக்கு இதே வேலையாகும். பைக்குகளைத் திருடுவதை தொழிலாகவே வைத்திருந்தார். இவர் மீது தமிழகத்தின் பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளனவாம். 56 சிறைக்குப் போய் திரும்பிய அவர் திருந்தாமல் தொடர்ந்து திருடனாகவே இருந்து வந்தார். தற்போது 57வது முறையாக சிறைக்குப் போயுள்ளார்.
சிறைக்குப் போய் திரும்பியதும், 100 வீடுகளில் திருடி சதம் போட்ட "ஸ்டைல் பாண்டி" போல இவரும் சீக்கிரமே 60வது முறையாக சிறைக்குப் போய் "மணி விழா" காண்பார் என நம்பலாம்.. விழாக் கொண்டாட அண்ணனின் "அடி விழுதுகள்" தயாராகட்டும்!