பாஜக அரசு தோற்றுப் போய் விட்டது.. பட்ஜெட் நிரூபித்து விட்டது.. ப.சிதம்பரம் அதிரடி
இந்த பட்ஜெட்டின் மூலம் பாஜக அரசு தோல்வியடைந்து உள்ளது நிரூபணமாகி உள்ளது என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரையின் மூலம் ஆளும் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது நிரூபணமாகி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பாஜக அரசின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், பலவித எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் எழுப்பி இருந்தது.
பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த நிலையில், அது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் இந்த பட்ஜெட் மிகவும் மோசமான பாதையில் இந்தியாவை அழைத்துச்செல்லும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
தோல்வியடைந்த அரசு
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மிகவும் மோசமான அம்சங்களைக் கொண்ட பட்ஜெட் அறிக்கை இது. தோல்வியடைந்த அரசு என்பதை இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிரூபித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், கடந்த நிதியாண்டில் 3.25 இருந்த நிதிப்பற்றாக்குறை இந்த ஆண்டு 3.5% ஆக அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பால் இந்தியா விரைவில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
விவசாய வருமானம் இரட்டிப்பு
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மீனவர்களை ஏமாற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்து உள்ளது. வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு சலுகை அறிவிப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளன. விவசாயம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய வருமானம் இரட்டிப்பாகப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். அவர் இந்த உலகத்தில் இருந்து தான் பேசுகிறாரா என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
சாத்தியமில்லாத திட்டங்கள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 500 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்து இருக்கிறார் அமைச்சர் அருண் ஜெட்லி. இது நம்பும்படியாக இருக்கிறதா ? பத்தாண்டு திட்டங்களில் அறிவிக்க வேண்டிய திட்டங்களை எல்லாம் ஓர் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வெற்று அறிவிப்புகளாகத் தான் இருக்கப்போகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
வளர்ச்சிப் பாதையில் இந்தியா
பட்ஜெட் மீதான எதிர்க்கட்சித்தலைவர்களின் கருத்துகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், அனைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்து உள்ளது. ஆனால் சிலர் தேவை இல்லாமல், புள்ளி விபரங்கள் அறியாமல் பேசி வருகின்றனர். உண்மையில் இது இந்தியவின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஒரு பட்ஜெட். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெறும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.