மகனை நல்லா படிக்க வைக்கணும்...வீரர் செந்தில்குமாரின் லட்சியக் கனவையும் சுட்டுக் கொன்ற நக்சல்கள்!
தஞ்சாவூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர் செந்தில் குமார் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மகன் சக்திபிரியனை நல்லா படிக்கவைக்கணும் அதற்காகவே சிஆர்பிஎப் பணியை செய்கிறேன் என்று நெருங்கிய நண்பர்கள் மத்தியில் அடிக்கடி தனது கனவைப் பகிர்ந்துகொண்ட செந்தில்குமார், இன்று காற்றோடு கலந்துவிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தைக் கபளீகரம் செய்துள்ள நக்சல்களின் துப்பாக்கிக்குண்டுக்கு அவர் பரிதாபமாகப் பலியானார்.
சோகமயம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு செந்தில்குமாரின் உடல் நேற்று கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலைக் கண்ட உறவினர்கள், செந்தில்குமார் பற்றிய நினைவுகளைச் சொல்லி சொல்லி அழுதது அந்த இடத்தில் சோகத்தை நிரப்பியது.
ஓய்வுக்கு ஒரு மாதம்...
அதோடு இன்னும் அவர் ஓய்வு பெற ஒரு மாதம்தான் பாக்கி இருக்கிறது. அதற்குள் அவர் நிரந்தமாக போய் சேந்துட்டாரே என்று கூறி, மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவுகள் கண்ணீர் வடித்தனர்.
மகன் கல்விக்காக...
'நாம கோயம்புத்தூர் போய் செட்டிலாகிடுவோம். எனக்கு என் புள்ளைய நல்லா படிக்கவைக்கணும்...அதுதான் எனது கனவு லட்சியம் எல்லாமே.' என்று மனைவி மற்றும் பெற்றோர்களிடம் கூறிவந்துள்ளார் செந்தில் குமார். அதற்காகவே இன்னும் 2 ஆண்டுகளை கூடுதல் பணிக்காலமாக அவர் நீட்டித்துக்கொண்டுள்ளார்.
அரசு பணி
குடும்பத்தின் ஒரே வாழ்வாதரமான செந்தில்குமாரை இழந்து பெற்றோரும் மனைவி மகன் உள்ளிட்ட உறவுகளும் கலங்கித் தவிக்கிறார்கள். அரசு இழப்பீடு வழங்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அவரை இழந்து நிற்கும் மனைவி வித்யாவுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் செந்தில்குமார் உறவினர்கள்.