பஸ் கட்டண உயர்வை பைசா கணக்கில் குறைத்தாலும் நாளென்றுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு.. சொல்கிறது தமிழக அரசு
பைசா கணக்கில் குறைத்தாலும் நாளென்றுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
Recommended Video
சென்னை : பைசா அளவில் பேருந்து கட்டணக்குறைப்பு செய்யப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பைசா குறைப்புக்கே நாளென்றுக்கு நான்கு கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மிகுந்த நஷ்டத்தில் இயங்கியதை அடுத்து, தமிழக அரசு கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. திடீரென உயர்த்தப்பட்ட இந்த கட்டண அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிக கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாளை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள்
அதேபோல், விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உயர்த்தப்படும் போது ரூபாய் கணக்கில் இருந்த கட்டண உயர்வு தற்போது பைசா அளவிலேயே குறைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவிக்கையில், இந்த விலை குறைப்பால் மக்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவது இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
கட்டணக்குறைப்பு நடவடிக்கை
இந்நிலையில் அரசு அளித்து விளக்கக்குறிப்பில், நாளென்றுக்கு 12 கோடி ரூபாய் அளவில் ஏற்பட்ட இழப்பை தவிர்க்கவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே கட்டணக்குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. பைசா அளவில் குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில், இதற்கே நாளென்றுக்கு நான்கு கோடி ரூபாய் அளவில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவித்து உள்ளது.