அதிமுக ஆட்சி கவிழும்... புதிய அரசு உருவாகும்- திருநாவுக்கரசர் ஆரூடம்- Exclusive
அதிமுகவை தன் இஷ்டத்துக்கு பயன்படுத்தப் பார்க்கிறது பாஜக அரசு. அதனால் இந்த ஆட்சி கவிழ்ந்து புதிய அரசு உருவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டி
சென்னை: பாஜக, அதிமுகவை தன் இஷ்டத்துக்கு பயன்படுத்தப் பார்க்கிறது. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்து புதிய அரசு உருவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களின் போதே மோடி அரசு அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டு வந்து சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.
எம்ஜிஆர் உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த இந்திராகாந்தி எம்ஜிஆரை நேரில் வந்து பார்த்து, அவரை உடனே அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அதற்காக சிறப்பு விமானத்தையும் வழங்கினார்.
ஏன் மோடி ஜெயலலிதாவை சந்திக்கவில்லை?
ஆனால், ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, பிரதமர் மோடி ஜெயலலிதாவை மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லை. குறைந்தபட்சம் தங்கள் அரசின் சுகாதாரத்துறை செயலரையோ அமைச்சரையோ அனுப்பி ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அப்போதே எல்லா விஷயங்களும் மர்மமாக நடக்க ஆரம்பித்தன. பாஜக தனது சித்து விளையாட்டை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே ஆரம்பித்துவிட்டது.
இரவோடு இரவாக பதவியேற்பு ஏன்?
அண்ணா, எம்ஜிஆர் இறந்தபோது தற்காலிகமாக முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு, சில நாட்கள் கழிந்தபின்பு தான் நிரந்தர முதலமைச்சரை எம்.எல்.ஏக்களை கூட்டி, ஆலோசித்துத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், ஜெயலலிதா இறந்தவுடன் இரவோடு இரவாக மிக அவசரமாக முதலமைச்சரை பதவியேற்க வைத்தது பாஜக தான்.
இரு அணிகளும் இணைஇவதில் சிக்கல்
அதன்பிறகு அதிமுகவை உடைத்து, இரண்டு அணிகளாகப் பிளவுபடுத்தி அதில் ஒரு அணியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதில் பாஜக அரசு வெற்றி பெற்றது. ஆனால், உடைத்த அணியின் பலம் தினகரனால் குறைந்து வருவதால், இரண்டு அணிகளையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தது பாஜக. ஆனால், அங்கு யார் பொதுச் செயலாளர், முதல்வர் என்கிற போட்டியில் இரண்டு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தினகரனால் குழப்பம்!
அதனால் தற்போது இரண்டு அணிகளையும் பயன்படுத்தி, ஒரு சிலரை ஒதுக்க நினைக்கிறார்கள். ஆனால் தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவருக்கு ஆதரவாக தினம் எம்.எல்.ஏக்கள் சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.பத்து, இருபது எம்.எல்.ஏக்கள் என்பது மாறி இன்று 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு என்ற நிலை உருவாகியுள்ளது.
மூன்று அணியாக பிளவுபட்ட அதிமுக
இன்று நடக்கும் ஆட்சிக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் உள்ளது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அதிமுகவை இன்று மூன்று அணிகளாக உடைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கம் நிற்குமா, நிலைக்குமா என்பது யாருக்குமே தெரியாது. ஏன் அவர்களுக்கே கூட தெரியாது.
ஆட்சி கவிழும்
மக்களுக்கு செயல்படாத அரசாங்கம் ஆட்சியிலிருந்துகொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை எனில், இந்த அரசாங்கத்தை விட தேர்தல் வருவதே சிறந்தது. 118 பேர் இருந்தால் ஆட்சி நிலைக்கு. இல்லையென்றால் ஆட்சி கவிழும். ஆட்சி கவிழ்ந்தால் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளது.
ராகுல் தமிழக சுற்றுப்பயணம்
நேரு முதல் ராகுல் வரை காங்கிரஸ் தலைவர்களைப் பார்க்கவும் அவர்கள் பேச்சைக் கேட்கவும் தமிழக மகக்ள் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுல், தங்களுக்கு குடும்ப ரீதியான் உறவு தமிழகத்திடம் உள்ளது. அதனால் தமிழகத்துக்கு வர விரும்புகிறேன் என கூறினார். எனவே ராகுல்காந்தியை அழைத்து வந்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.