இன்று நான் தோற்றேன்.. இப்படி உங்களால் கூற முடியுமா.. இந்த ஐஏஎஸ் அதிகாரி சொல்கிறார் பாருங்கள்!
சென்னை: நமது பலவீனத்தையும், நாம் தோற்றதையும் யாருமே வெளிப்படுத்திக் கொள்ள முயல மாட்டோம். ஏன் நினைக்கக் கூட மாட்டோம். ஆனால் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நான் இன்று தோற்ற தினம் என்று பகிரங்கமாக பேஸ்புக்கில் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவர் விஜய் கார்த்திகேயன். கோவை மாநகராட்சி ஆணையராக இருக்கிறார். தனது பேஸ்புக்கில் இன்று அவர் தனது பழைய பதிவு ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதுதான் வைரல் ஆகியுள்ளது.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பதிவு அது. பேஸ்புக் மெமரியில் வந்த அதை அவர் பகிர்ந்துள்ளார். அதில், 2009 ஆகஸ்ட் 4ம் தேதி நான் போட்ட பதிவு இது. அப்போது நான் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தோல்வி அடைந்திருந்தேன். கடவுளுக்கு நன்றி.. கனவுகள் ஒரு நாள் உண்மையாகும் என்று கூறியுள்ளார் கார்த்திகேயன். 2009 பதிவில் அவர், வீழ்ந்து விட்டேன்.. ஆனாலும் அவுட் ஆகவில்லை என்று கூறியிருந்தார்.
எப்போதுமே எல்லா முயற்சிகளும் வெற்றியில்தான் முடிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பல முயற்சிகள் தோல்வியில் முடியும். சில எடுத்த எடுப்பிலேயே வெல்லும். ஆனால் வெற்றி வந்தால் ஆடாமல் இருப்பதும், தோல்வி வந்தால் தளர்ந்து போகாமல் இருப்பதும் மிக மிக முக்கியம். அதைத்தான் கார்த்திகேயனின் பதிவு சுட்டிக் காட்டுகிறது.
விஜய் கார்த்திகேயன் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரும் ஆவார். ஆனால் அவரது கனவு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே. அந்தக் கனவை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் தான் தோல்வியுற்றதை உலகுக்கு வெளிப்படுத்தி, தோல்வியும் வரும், ஆனால் கடைசியில் வெல்வது உங்களது கனவாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டி தன்னம்பிக்கையை செய்தியாக வழங்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. விஜய் கார்த்திகேயன் ஒரு சின்ன உதாரணம்தான்.. சியர்ஸ் நண்பர்களே!