கோட்டையை வென்றாச்சு.. ஆனாலும் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்திருக்கே.. சுதாரிக்க வேண்டும் திமுக!
கம்பீரமான வெற்றியை திமுக பெற்றுவிடவில்லை
சென்னை: வேலூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது.. ஆனால் அமோக வெற்றி என்றோ, கம்பீரமான வெற்றி என்றோ சொல்லி விட முடியாது.. கஷ்டப்பட்டுதான் வேலூர் கோட்டை.. திமுக கோட்டையாகி உள்ளது!
5-ம் தேதி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, இன்று காலை ஓட்டு எண்ண ஆரம்பித்தார்கள். நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என 28 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ண ஆரம்பித்தவுடனேயே அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.
கடும் போட்டி
இவர்களுக்கு நடுவில் திடீரென தீபலட்சுமி வாக்குகள் பெற்று, இரு தரப்பின் வயிற்றிலும் புளியை கரைத்தார். இவ்வாறு சிறிது நேரம் மாறி மாறி வாக்கு முடிவுகள் வந்தன. திமுக, அதிமுக தரப்பில் கடுமையான போட்டி நிலவியது.
பேட்டி
பொதுவாக, ஓட்டு எண்ண ஆரம்பித்தால், 2 மணி நேரத்திலேயே ஒரு குத்துமதிப்பான முடிவு தெரிந்து விடும். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை.. 12-ம் சுற்று வரை ஏசிஎஸ் முன்னிலையில் இருந்தார். அதாவது ஏ.சி.சண்முகம் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். இந்த சமயத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுக ஜெயித்து விட்டது போல ஒரு பேட்டியும் தந்தார்.
கொண்டாட்டம்
"திமுகவின் போலி பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொண்டுவிட்டனர். பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டார். அதுகுறித்த மக்களின் கருத்தும் மாறிவிட்டது" என்று சொல்லிவிட்டார். உடனே அதிமுக தலைமையகத்தில் ஸ்வீட் கொடுத்து ஆட்டம் பாட்டம் ஆரம்பமானது.
திடீர் திருப்பம்
ஆனால் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற ஆரம்பித்தார். இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்ததுதான். அப்போது முதல் கொஞ்சமும் பின்னடைவு ஏற்படாமல், முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அறிவாலயத்தில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.
பின்னடைவு
ஆக மொத்தம், ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகுதான் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே 37 தொகுதிகளை அசால்ட்டாக வெற்றி பெற்ற திமுகவுக்கு வேலூர் வெற்றி என்பது கொஞ்சம் பின்னடைவுதான். இதற்கு காரணம், அதிமுகவின் கடின முயற்சியும், வகுத்து செயல்பட்ட பிரச்சார யுக்தியும்தான். அந்த வகையில் அதிமுகவை பாராட்டவே செய்யலாம்.
கோட்டை
அதனால்தான் இருக்கும் 6 தொகுதிகளில் 3-ல் மட்டுமே திமுகவால் முன்னிலை பெற முடிந்தது. எப்படியோ, இது ஒரு கம்பீரமான வெற்றி என்று சொல்லி கொள்ள முடியாவிட்டாலும், வேலூர் கோட்டையை தனது கோட்டையாக இறுதியில் மாற்றிவிட்டது திமுக!