பெரியார் இதை ஏற்க மாட்டார்!
Recommended Video
சென்னை: கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியவர் தந்தை பெரியார். ஆனால், அவரது அபிமானிகள் சிலரே, பிரச்சினைக்கு தொடர்பில்லாத அப்பாவிகள் மீது அத்துமீறியுள்ளது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்பட வேண்டியது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் நேற்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கருத்து கடும் கண்டனங்களை ஈட்டியதையடுத்து நேற்று இரவே போஸ்ட்டை நீக்கிவிட்டார் எச்.ராஜா.
பெரியார் சிலைக்கு சேதம்
அதேநேரம், நேற்று இரவு திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை பாஜக நிர்வாகியால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுக்க பதற்றம் தொற்றிக்கொண்டது. கோவையிலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியது பதற்ற நெருப்புக்கு நெய் ஊற்றியது.
ராஜா வருத்தம்
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர், பாஜக மேலிடத்திற்கு ராஜாவின் பேஸ்புக் பதிவால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கூறி முறையிட்டுள்ளனர். மேலிடம் அறிவுறுத்தியதன்பேரில், ராஜாவும், பெரியார் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். பேஸ்புக் அட்மின்தான் அந்த போஸ்ட்டை தனது ஒப்புதல் இல்லாமல் போட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
பூணூல் அறுப்பு
இது ஒருபக்கம் என்றால், சென்னை மயிலாப்பூரில் இன்று காலை, பிராமணர்கள் சிலரின் பூணூலை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அறுத்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பயந்து ஓடியதால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கிருந்த வேறு சிலர் காவல்துறைக்கு புகார் அளித்ததன் பேரில், போலீஸாருக்கு புகார் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து பா்த்தனர்.
திராவிடர் விடுதலை கழகத்தினர்
அப்போது 8 பேர் இதுபோன் செயலில் ஈடுபட்டு தப்பியோடியது தெரியவந்தது. அவர்களது படங்களை போலீசார் வெளியிட்டு தேட ஆரம்பித்தனர். இதையடுத்து திராவிடர் விடுதலை கழக அமைப்பை சேர்ந்தவர்கள் என, பிரபாகரன், ராவணன், உமாபதி, ராஜேஷ் ஆகிய நான்கு பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்கள் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பதை பிரதிபலிக்கும் வகையில், அவரின் போட்டோ பொரிக்கப்பட்ட டீ சர்ட்டுடன் வந்து சரணடைந்தனர். இதனிடையே, இவர்களின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆதரவு தெரிவிக்கவில்லை
தமிழ்நாடு பிராமணர் சங்கம் நேற்று இரவே, ராஜா கருத்தை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ராஜாவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்றும் கூறிவிட்டது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை என நேற்றே கை கழுவிவிட்டார். இந்த விவகாரத்தில், கட்சி ஆதரவும் இல்லாமல், தான் சார்ந்த சமுதாயத்து ஆதரவும் இல்லாத நிராயுதபாணிதான் ராஜா. இருப்பினும், விவகாரத்தில் தொடர்பே இல்லாத அப்பாவிகள் சிலரின் மத அடையாளத்தை வலுக்கட்டாயமாக சிலர் அகற்றியுள்ளது அறிவுசார் சமூகம் ஏற்க கூடியது அல்ல. தந்தை பெரியார் இப்போது இருந்திருந்தால், இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டவர்களை தனது தடியால் இழுத்து வந்து தட்டி கேட்டிருப்பார்.
தந்தை பெரியார் மண்ணெண்ணெய் கேனையும் தீப்பெட்டியையும் கையில் வைத்திருக்க சொன்னார்... சட்டத்துக்குட்பட்டு கத்தியை தற்பாதுகாப்புக்கு வைத்திருக்க சொன்னார்.. ஆனால் வாழ்நாளில் ஒருமுறையேனும் இவற்றை கொள்கை எதிரிகள் மீது பிரயோகிக்க சொன்னதே இல்லை என்பதை பெரியாரிஸ்டுகள் உணராதது ஏனோ?