நாங்களும் கல்லா கட்ட வேண்டாமா... 9 மணல் குவாரிகள் மூடியதற்கு காரணம் இதுதானாம்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நெருங்கிய தொடர்பில் இருந்த சேகர் ரெட்டி தற்போது சிறையில் இருப்பதால், மணல் குவாரிகளை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.
சென்னை: மணல் மாஃபியாவாக கொடி கட்டி பறந்தவர் ஓபிஎஸ்ஸின் நெருங்கிய நண்பர் சேகர் ரெட்டி. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பல்வேறு தடாலடி மாற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்றன.
அதில் ஒன்றுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான மணல் குவாரிகளின் மன்னன் போல் செயல்பட்டு வந்த சேகர் ரெட்டி, வருமானவரித் துறை அதிகாரிகளின் ரெய்டில் சிக்கியது. அடுத்தடுத்த வழக்கில் சிறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியால் ஜாமீனிலும் வெளியே வரமுடியமால் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சைக்கிள் கேப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மணல் குவாரிகளை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதலாளிகளுக்கு கைமாற்றிவிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வளவு நாள்தான் ஓபிஎஸ் கூட்டாளிகளே அனுபவிப்பது என்று கொங்கு மண்டலம் பக்கம் மடையை மாற்றும் திட்டத்தில் தீவிரமாக இறங்கிய எடப்பாடி, 9 மணல் குவாரிகளை மூடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் ஆணையை சிரமேற்று நிறைவேற்றிய அதிகாரிகள், திருச்சி, கரூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்த 9 மணல் குவாரிகளை மூடினார்கள். இதன் மூலம் சிறையில் இருந்தபடியே மணல் மாஃபியா பிசினசை செய்து வந்த சேகர் ரெட்டியிடம் இருந்து மணல் குவாரிகள் பிடுங்கப்பட்டுள்ளன.
இரவோடு இரவாக மின்னல் வேகத்தில் பிடுங்கப்பட்ட மணல் குவாரிகளை அதே சூட்டோடு திருச்செங்கோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக நெருங்கிய முக்கிய புள்ளிகளுக்கு கைமாற்றப்பட உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.