அதிமுகவுக்கு.. இத்தோடு இது 6.. ஆனால் வெற்றி வித்தியாசத்தில் இதுதான் நம்பர் 1!
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் நடந்த 6வது இடைத் தேர்தல் இது. ஆறிலும் அதிமுகவே வென்றுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். ஆட்சிக்கு வந்ததும் அமைச்சராக அறிவிக்கப்பட்ட திருச்சி எம்.எல்.ஏ. மரியம் பிச்சை கார் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதில் பரஞ்சோதி வெற்றி பெற்றார். திமுகவின் கே.என். நேரு 2வது இடத்தைப் பெற்றார். இந்தத் தேர்தலில் அதிமுகவின் பரஞ்சோதி 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2012ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் அதிமுக சார்பில் முத்துச் செல்வி போட்டியிட்டு 68 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தினார்.
புதுக்கோட்டைக்கு 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி நடந்த இடைத் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் போட்டியி்ட்டு, தேமுதிக வேட்பாளரை 71 ஆயிரத்து 498 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஏற்காடுக்கு 2013ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சரோஜா, திமுகவின் மாறனை 78 ஆயிரத்து 116 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஆலந்தூருக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன், திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை 18 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்தத் தேர்தல்கள் எல்லாம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்தவை. இப்போது ஸ்ரீரங்கத்திற்கு ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் தேர்தல் நடந்துள்ளது. அதில் இதுவரை நடந்த இடைத் தேர்தல்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.