'முத்துக்களோ கண்கள்'... பாருங்கள்... "சிவாஜி கணேசனாக" மாறி நிற்கும் கட்ஜுவைப் பாருங்கள்!
சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த படத்தின் பாடல் ஒன்றை தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜுவின் தமிழ்ப் பற்றும், தமிழ்க் காதலும் வர வர கூடிக் கொண்டே போகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு அவர் முழுமையான தமிழ்க் காதலராக மாறி விட்டார்.
முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாக போஸ்ட் போட்டு வருகிறார் கட்ஜு. தமிழகத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் புகழாத நாள் இல்லை.
இந்த நிலையில் தனக்குப் பிடித்த தமிழ்ப் பாட்டு ஒன்றை அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967-68ல் இருந்தபோது தான் இந்தப் பாட்டை விரும்பிக் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞனாக இருந்தபோது அர்த்தமே புரியாத நிலையிலும் இப்பாடலை தான் கேட்டு ரசித்ததாக அவர் கூறியுள்ளார்.
அது சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த முத்துக்களோ கண்கள் என்ற காதல் பாடலாகும். பாடலைக் குறிப்பிட்டதோடு விடாமல் அதன் யூடியூப் இணைப்பையும் சேர்த்துப் போட்டு அசத்தியுள்ளார் கட்ஜு.
இதற்கு செம ரெஸ்பான்ஸ். பலரும் கட்ஜுவை புகழ்ந்தும், வாழ்த்தியும், ஆச்சரியப்பட்டும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு கமெண்ட்டுக்குப் பதிலளித்த கட்ஜு, நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன், என்னால் டூயட் பாடவும் முடியும். தயாரிப்பாளர்களிடம் சொல்லுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் வைததுள்ளார் கட்ஜு.