திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எதற்கு 41 தொகுதிகள்? பின்னணி தகவல்கள்
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கி கொடுத்த திமுக, இம்முறை 41 தொகுதிகளை மட்டுமே வழங்கியதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக-காங்கிரஸ் நடுவே கூட்டணி ஏற்பட்டுள்ளது. மேலும், தொகுதி ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தானது.
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்திப்பில், இந்த ஒப்பந்தம் இறுதியானது.
22 சீட் கம்மி
கடந்த தேர்தலின்போது காங்கிரசுக்கு 63 சீட்டுகளை வாரி வழங்கியது திமுக. ஆனால் இம்முறை, 41 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. திமுகவிலுள்ள ஒரு பிரிவினர் காங்கிரசுக்கு இத்தனை சீட்டுகளே ரொம்ப அதிகம் என்று முணுமுணுக்கின்றனர்.
செல்வாக்கு சரிவு
அதேநேரம், காங்கிரஸ் கட்சியில் சிலர் இந்த சீட் போதாது என்று முணுமுணுத்து வருகிறார்கள். ஈழப் போருக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு தலைகீழாக சரிந்து விட்டது. இதனால் அக்கட்சிக்கு அதிக சீட் தர வேண்டாம் என்பது திமுக தலைமை திட்டமாக இருந்தது.
பலவீனம்
சென்ற தேர்தலை விட குறைவாக சீட் பெற்றால், தாங்கள் பலவீனமாக இருப்பதை தாங்களே ஒப்புக்கொண்டதாகிவிடும் என்பதே காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கவலையாக இருந்தது. இருப்பினும் திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து கீழே இறங்க தயாராக இல்லையாம்.
தனியாக போக முடியாது
திமுகவிடம் கோபித்துக்கொண்டு எங்கு செல்வது என்பதும் காங்கிரசுக்கு தெரியவில்லை. வேறு எங்கும் காங்கிரசை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்ற சூழல் உள்ளதால், தனித்து போட்டியிட்டு டெபாசிட் இழந்து அவமானப்படுவதை காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை.
வாசனை வைத்து டீல்
எனவே திமுகவிடம் நாகரீகமாக ஒரு டீல் போட்டனர் காங்கிரஸ் தலைவர்கள். கடந்த சட்டசபை தேர்தலில் வாசன் ஆதரவாளர்கள் 22 பேர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர்., தற்போது வாசன் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார். எனவே, எஞ்சிய 41 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினால், இதை கவுரவமாக சொல்லிக்கொண்டு வாக்கு கேட்க வசதியாக இருக்கும் என்று வாதம் முன் வைத்தனர்.
மீசையில் மண் ஓட்டலைல்ல
கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை.. என்ற சொலவடையை நிரூபிக்கும் வகையிலான காங்கிரசின் இந்த டீல், திமுகவுக்கு பிடித்துப்போனது. சரி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி 41 தொகுதிகளை தூக்கி கொடுத்துள்ளது திமுக என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.