இந்த ஆண்டு வெயில் வெளுத்து வாங்கும், அனல் தகிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி, அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடை காலத்தின்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த ஆண்டு (2016) பதிவானது. 1961-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை தரைவழி வெப்ப காற்றின் அளவு 0.91 டிகிரி என்ற அளவில் இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வெப்ப காற்றின் அளவு 1.36 டிகிரி என்ற அளவில் பதிவானது. இது 1901-ம் ஆண்டுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வெயில் அளவில் 2-வது பெரிய அளவீடாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெப்ப காற்றின் அளவு 0.67 டிகிரி என்ற அளவில் இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதே வெப்ப காற்றின் அளவு 1 டிகிரி என்ற அளவில் இருக்கிறது.
இந்த ஆண்டு கோடைகாலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் வெயில் அதிகரிக்கும். முக்கியமாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் சராசரியைவிட ஒரு டிகிரி செல்சியஸுக்கு மேல் அனல் தகிக்கும். பிற பகுதிகளில் கோடையில் எப்போதும் இருப்பதைவிட ஒரு டிகிரி வரை கூடுதலாக வெப்பம் நிலவும். பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், சன்டிகர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த கோடையில் அதிகம் பாதிக்கப்படும்.
கடந்த ஆண்டு வெயில் கொடுமையால் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; இதில் 400 பேர் ஆந்திரம், தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.