ஆர்.கே.நகரில் "அம்மா"வை எதிர்த்து தில்லாக களம் கண்டுள்ள திருநங்கை "தாய்" தேவி!
சென்னை: படு தில்லாக தேர்தல் களம் கண்டுள்ளார் ஜி.தேவி. இவர் ஒரு திருநங்கை. இவர் நிற்பது ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக. எதிர்த்து நிற்பது முதல்வர் ஜெயலலிதாவை என்ற பரபரப்பு இவரிடம் சற்றும் இல்லை என்பதுதான் தேவியின் விசேஷம். மிகத் தெளிவாக பேசுகிறார். மிகுந்த ஆர்வத்துடன் பேசுகிறார்.
33 வயதான தேவியின் சொந்த ஊர் சேலம். அங்கு தாய் என்ற ஆதரவற்றோருக்கான அமைப்பை நடத்தி வருகிறார் தேவி. ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக இவரை நாம் தமிழர் தலைவர் சீமான் அறிவித்தபோது சற்றும் தயக்கம் இல்லாமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டாராம் தேவி.
இத்தனைக்கும் இவருக்கு ஜெயலலிதாவை மிக மிகப் பிடிக்குமாம். அவரது தன்னம்பிக்கை, தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட தலைவரை எதிர்த்து களம் காண்பதை நான் பெருமையாக உணர்கிறேன். அதேசமயம், போட்டி என்று வந்து விட்டால் விட மாட்டேன். எனது வெற்றிக்காக தீவிரமாக உழைப்பேன் என்றும் கண்களில் பொறி பறக்கக் கூறுகிறார் தேவி.
மக்களை ஏமாற்றி விட்டார் ஜெயலலிதா
தேவி கூறுகையில் ஒரு இரும்புப் பெண்மணியாக எனது மதிப்பில் இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் ஒரு எம்.எல்.ஏவாக இந்தத் தொகுதிக்கு அவர் பல தோல்விகளையே கொடுத்துள்ளார். தனது தொகுதியின் அபிலாஷைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை.
சுகாதாரம் - கல்வி
எனது தொகுதியில் சுகாதாரம் சரியில்லை. கல்விக்கான வசதிகள் குறைவு. அதை உறுதி செய்ய நான் பாடுபடுவேன். இந்தத் தொகுதியில் அடிக்கடி பல்வேறு நோய்கள் பரவி மக்கள் அவதிப்படுகிறார்கள். அதை சரி செய்ய இதுவரை இருந்த உறுப்பினர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமூக சேவை
நான் சேலம் மகுடஞ்சாவடியில் பிறந்தேன். 12வது வகுப்பு வரை படித்துள்ளேன். தற்போது தாய் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். இதன் மூலம் 200 ஏழைக் குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கவனித்து வருகிறேன்.
எல்லோருக்கும் தாய்
என்னால் தாயாக முடியாது. எனவே எல்லோருக்கும் நான் தாயாக இருந்து சேவை செய்கிறேன். இதில் நான் மிகுந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அடைகிறேன் என்கிறார் தேவி.
உறுதிபடப் பேசும் தேவி
தனது பேச்சில் மிகத் தெளிவாகவும், அருமையாகவும் பேசும் தேவி, எதார்த்தமாகவும் பேசுவது அவர் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது தேவியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு.. கேட்டுப் பாருங்கள்.