காதலர் தினம்-: 3 கோடி ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி
காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இங்கு 500 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு நிலவும் தட்வெப்பநிலை மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற வகையில் உள்ளது.
இங்கு விளைவிக்கப்படும் ரோஜாக்களை காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பரிசளிப்பார்கள். ஓசூர் ரோஜாக்கள் இந்த ஆண்டு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் பாதிப்பு
இந்த ஆண்டு சீனாவில் ரோஜா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தாஜ்மகால் ரோஜாக்கள்
காதலர் தினத்தன்று பரிசளிப்பதற்காக சில பிரத்யேக வகை ரோஜாக்கள் பயிரிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தாஜ்மஹால், ரெட் ஜயன்ட், கஞ்ஜன் ஜங்கா, ரெட் ரோஸ், மிக்ரா, சிவப்பு ரோஜா ஆகிய ரகங் களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
ரோஜாக்களுக்கு நல்ல விலை
தாஜ்மகால் வகையைச் சேர்ந்த ரோஜா பூ ஒன்றின் விலை ரூ.25 முதல் ரூ.30 வரையும், க்ராண்ட் காலா வகை பூ ஒன்றின் விலை 20 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பர்ஸ்ட் ரெட் வகை பூ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேசமயம் சிறுவிவசாயிகள் தாங்கள் விளைவித்த பூக்களை 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்கின்றனர். காரணம் அவர்களிடம் சரியான பூக்களை பாதுகாக்க சரியான வசதி இல்லாததே காரணம் என்கின்றனர்
விவசாயி சாதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே உள்ள குடிசெட்லு கிராமத்தைச் சேர்ந்த ரோஜா ஏற்றுமதியாளர் இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை மட்டும் 75000 ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அவர் 60000 பூக்களை ஏற்றுமதி செய்தாராம்.
உலகம் முழுவதும்
இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் மட்டும் 1500 வகையான ரோஜாக்கள் விளைவிக்கப்பட்டு இந்தியவில் உள்ள பெருநகரங்களுக்கு மட்டுமின்றி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் அரேபிய நாடு களுக்கு 3 கோடி பூக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அன்பின் சின்னம் ரோஜா
காதலர் தினத்திற்கு மட்டுமல்லாது புத்தாண்டு, கிருஸ்துமஸ், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற அனைத்து நாட்களிலும் ரோஜாக்களை பரிசளிக்கின்றனர். இதனால் ஓசூர் ரோஜாக்களின் தேவை நாளுக்கு அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.