வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 12% அதிகமாக இருக்கும்.. சென்னை வானிலை மையம்!
வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 12% அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 12% அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இன்றே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது,
12% அதிகமாக இருக்கும்
வடகிழக்கு பருவமழை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும்.
மேலடுக்கு சுழற்சி
இலங்கை முதல் கர்நாடகா வரையிலான வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
வத்திராயிருப்பு 11 செமீ
அதிகளவாக வத்திராயிருப்பில் 11செமீ மழையும் சத்தியமங்கலத்தில் 9 செமீ மழையும் கோபிச்செட்டி பாளையம், கொடைக்கானல், அவினாசி ஆகிய பகுதிகளில் தலா 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரி கடல், தெற்கு கடற்பகுதி, கேரள கடற்பகுதி மற்றும் லட்சதீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதன்காரணமாக செப்டம்பர் 30 வரை இப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.
மிதமான மழை
சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை ஓரிரு முறை மிதமான மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.