சேதி தெரியுமா? இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட அதிகம் பெய்துள்ளதாம்!
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட அதிகம் பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட அதிகம் பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.
பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழையும் வெளுத்து வருகிறது. திருச்சி, மதுரை, திருவள்ளூர், தேனி, நெல்லை, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
7.5 சென்டி மீட்டர்
திருச்சியில் மட்டும் நேற்று பிற்பகல் ஒன்றரை மணி நேரம் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஒன்றரை மணி நேரத்தில் 7.5 சென்டி மீட்டர் மழை பதிவானது.
கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தென் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
12 மி.மீ கூடுதலாக
மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை இயல்பை விட அதிகம் பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை மழை 12 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
அதிகளவாக 11 செ.மீ
வழக்கத்தை விட 14% அதிகமாக கோடை மழை இதுவரை பெய்துள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் அதிகபட்சமாக கொடைக்கானலில் 11 செ. மீ., வால்பாறையில் 10 செ. மீ. மழை பெய்துள்ளது.
மிதமான வெப்பநிலை
இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மே 1 வரை 83 மிமீ பதிலாக 93மிமீ மழை பெய்துள்ளது. மழை காரணமாக வெப்பநிலை மிதமாக தொடர்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.