திட்டக்குடி: மது போதையில் வாலிபரின் காதை கடித்து துப்பிய 3 பேர் கைது
திட்டக்குடி: மது போதையில் வாலிபரின் காதைக் கடித்துத் துப்பிய 3 பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வதிஷ்டபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(30) என்ற விவசாயி சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(28), கிருஷ்ணமுர்த்தி(29), முருகன்(29) ஆகிய 3 பேரும் சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் மூவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஓட்டலுக்கு சாப்பிட வந்த சிவக்குமாரின் நண்பர் சாப்பிட இட்லி இருக்கிறதா என ஓட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு மது போதையில் இருந்த நண்பர்கள் கிண்டலாக பதிலளித்துள்ளனர்.
இதனை தட்டிக் கேட்ட சிவக்குமாரை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அண்ணன் தாக்கப் பட்ட தகவலறிந்து சிவக்குமாரின் தம்பி ராஜேஷ் குமார் (25), ஓட்டலுக்கு விரைந்து வந்துள்ளார். அங்கிருந்த வினோத் தரப்பினரிடம், தனது அண்ணனை தாக்கியது குறித்து நியாயம் கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. அப்போது வினோத் தரப்பில் இருந்த ஒருவர், திடீரென ராஜேஷ்குமாரின் இடது காதை கடித்து துப்பினார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வினோத், கிருஷ்ணமுர்த்தி, முருகன் ஆகிய 3 பேரையும் திட்டக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.