நெல்லையில் ஆவேசமாக பேசிய வைகோ... அசந்து தூங்கிய முத்தரசன், திருமா
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அசந்து தூங்கினர். வைகோவின் பேச்சை ரசிக்காமல் தொண்டர்களும் தண்ணீர் பாட்டில்களை தூக்கிப் போட்டு விளையாடியதைப் பார்த்து ஒரு கட்டத்தில் வைகோ கோபமடைந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்காக மக்கள் நலக்கூட்டணி முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. இதுவரை நான்கு கட்ட பிரச்சாரங்களை முடித்துள்ள தலைவர்கள் தேமுதிக உடன் இணைந்த பின்னர் 5 வது கட்ட பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
30 நிமிடங்களுக்கும் மேல் அவரது உரை நீடித்தது. பல ஆண்டு கால அரசியல் அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தூங்கி வழிந்தனர்.
தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருவருமே தவித்தனர். வைகோ தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர்களில் சிலர் மற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனைக் கண்டு வைகோ கோபமடைந்தார்.
நான் வந்து உயிரைக் கொடுத்து பேசிக்கொண்டிருக்கேன். எல்லாரும் தண்ணி பாட்டிலை எடுத்து வீசிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க என்று ஆவேசமாக பேசினார்.
வைகோ திடீரென குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசுவதைக் கேட்டதும், முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர், வைகோவின் பேச்சை மீண்டும் கவனிக்கத் தொடங்கினர். அவர்களின் உறக்கத்தை போக்கி சுறுசுறுப்பாக வைகோவின் பேச்சை கவனிக்க டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
ஒரு கட்டத்தைல் வைகோ உரையை முடிக்க போகிறார் என நினைத்த தொல். திருமாவளவன், தொண்டர்களை நோக்கி சின்னத்தை கூறும்படி சைகை காட்டினார். இதைக் கவனித்த வைகோ, இன்னும் தான் பேச்சை முடிக்கவில்லை என்று கூறி, உரையைத் தொடர்ந்தார். மறுபடியும் முதல்ல இருந்தா என்கிற ரீதியில் தொண்டர்கள் மீண்டும் உரையை கவனிக்கத் தொடங்கினர்.
அர்ஜூனன் பேச்சை கவனிக்காமல் பீமனும், சகாதேவனுமே தூங்குறாங்களேப்பா என்று கமெண்ட் அடிக்கிறது எதிர்கட்சித்தரப்பு.