எமது நோக்கம் உன்னதமானது..மாற்று அரசியலுக்கான எமது பயணம் தொய்வின்றித் தொடரும்: திருமாவளவன்
சென்னை: கூட்டணி ஆட்சி உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் !
thol.thirumavalavan statement about assembly election
எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது!
நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்;இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.
அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் வாரி இறைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது! ஊழல் கறை இல்லாதது!
எனவே, தமிழகம் முழுவதும் எமது கூட்டணியின் மாற்று அரசியலை ஏற்று வாக்களித்துள்ள இலட்சக் கணக்கான மக்களுக்கும் கொளுத்தும் வெயிலிலும் அரும்பாடுபட்டு தேர்தல் பணியாற்றிய, கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!
மேலும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்றாலும், மக்கள் அளித்துள்ள இந்த மகத்தான வாக்குகள் ( 48, 363 ) யாவும் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறது. எனவே, குறிப்பாக அவர்களின் காலடிகளிலும் எனது நன்றியைப் காணிக்கையாக்குகிறேன்.
அத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் 'கூட்டணி ஆட்சி' உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்!''என்று தெரிவித்துள்ளார்.