சென்னையில் இருப்பது தாமஸ் மன்றோ சிலையா, மர்லின் மன்றோ சிலையா? போலீஸே கன்ப்யூஷ் ஆகிடுச்சே
Recommended Video
சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கு, எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தாமஸ் மன்றோ சிலை என்பதற்கு பதில் நடிகை மர்லின் மன்றோ பெயரை குறிப்பிட்டு உள்ளது சென்னை காவல்துறை.
விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அண்ணாசாலையில் பேரணி நடத்த திட்டமிட்டு பழ.நெடுமாறன் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டபோது அது மறுக்கப்பட்டது. அந்த சூழ்நிலையிலும் அங்கு பேரணி நடத்தப்பட்டதாக கூறி, பழ.நெடுமாறன், வைகோ உட்பட மொத்தம் 262 பேர் மீது வழக்கு பதிவு செய்தது திருவல்லிக்கேணி காவல் துறை
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை சென்னை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ நேற்று தாக்கல் செய்தார்.
அப்போதுதான் ஒரு விஷயம் வெளியுலகிற்கு அம்பலமானது. அண்ணா சாலையில் மர்லின் மன்றோ சிலை அருகில் பாதுகாப்பு பணியில் உதவி ஆணையாளர் உத்தரவின்பேரில் எனது போலீஸ் பார்ட்டி சகிதம் பணியில் இருந்தேன், என்று திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவிப்பது போல அந்த குற்றப்பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையிலேயே அங்கு இருக்கும் சிலை என்பது மெட்ராஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் தாமஸ் மன்றோ சிலை ஆகும். மர்லின் மன்றோ என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை.
தாமஸ் மன்றோவை மறந்துவிட்ட காவல்துறை, மர்லின் மன்றோவை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளது. தாமஸ் மன்றோவுக்கு, வெண்கலத்திலான 6 டன் எடையுள்ள சிலை 1839 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.