தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகள் அரச பயங்கரவாதம்.. ராகுல் காந்தி கடும் தாக்கு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியிர் உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கொலை வெறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
அரச பயங்காரவாதம்
தமிழகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். அரச பயங்கரவாதத்திற்கு இது ஒரு காட்டு மிராண்டித்தனமான எடுத்துக்காட்டாகும்.
|
உயிரிழந்த தியாகிகள்
அநீதிக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தியாகிகளின் குடும்பங்களுக்கும் இரங்கலையும் காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனையையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
மிகுந்த துயரம் அடைந்தேன்
இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இன்று 11 பேர் கொல்லப்பட்டதை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
11 பேர் பலி?
மாநிலத்தில் அமைதியை பராமரிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஆளுநர் தனது அறிக்கையில் 11 பேர் பலி என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.