தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திக் கொன்றது சரிதான்.. சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் பேச்சு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சரி என சூலூர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கோவை: தூத்துக்குடியில் 10 பேரை சுட்டுக் கொன்றது சரிதான் என்று சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மக்களின் எழுச்சி போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் நாடே கொந்தளித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் தொடர்ந்து கலவரத்தின் பிடியில் சிக்கி வருகிறது.
இந்நிலையில், போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சுட்டுக் கொன்றது சரிதான் என்று சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார். எம்எல்ஏவின் இந்த கருத்து மக்களுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எம்எல்ஏ கனகராஜ், போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றால் தூத்துக்குடியே இருந்திருக்காது என்றார்.
காவலர்களும் மனிதர்கள்தானே, அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன, ஆயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூறையாட வந்தால், காவல்துறை என்ன வேடிக்கையா பார்த்து கொண்டு இருக்கும்? என்று கேள்வி எழுப்பிய கனகராஜ், இந்த 10 பேரை சுட்டு கொன்றிருக்காவிட்டால் தூத்துக்குடியே இருந்திருக்காது, போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றது சரிதான் என்றார். அதோடு அவர் நிற்கவில்லை, 10 பேரை சுட்டு தூத்துக்குடி என்னும் ஒரு மாவட்டத்தையே தமிழக காவல்துறை காப்பாற்றியுள்ளதாகவும் போலீசாருக்கு புகழாரம் வேறு சூட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் அப்பாவி மக்கள் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே இப்படி பேசியிருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயப்படுத்தியும், அராஜக போக்கில் ஈடுபட்ட போலீசாருக்கு வக்காலத்தும் வாங்கிய இந்த எம்எல்ஏவின் பேச்சு ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இறந்தவர்களின் உயிர்களுக்கெல்லாம் இவ்வளவுதான் மதிப்பா என்று பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளன. துப்பாக்கி சூடு நடந்து உயிர்கள் ஒவ்வொன்றாக பறிபோவதை கண்டு தமிழக அமைச்சர்கள் பதறியடித்து களத்துக்கு வந்திருந்தாலோ, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தாலோ சூலூர் எம்எல்ஏ இப்படி பேசியிருப்பாரா?