ஜெ. உடல்நிலை குறித்து பேஸ்புக்கில் வதந்தி... தூத்துக்குடி நபர் கைது... கைதானவர்கள் எண்ணிக்கை 8 ஆனது
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயம் என்ற இளைஞரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ அறிக்கை வெளியிட்டு வருகிறது.
ஆனால், இதுவரை தமிழக அரசு முறைப்படி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் உலா வரத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து வதந்திகளைக் கட்டுப்படுத்த, வதந்தி பரப்புவோர் மீது அதிரடி நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அந்தவகையில், ஏற்கனவே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயம் என்பவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சகாயத்தை தூத்துக்குடியில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சகாயத்தையும் சேர்த்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.