தூத்துக்குடியில் நேற்றும் தொடர்ந்த போலீஸ் துப்பாக்கி சூடு.. பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நடத்தினர். போலீசார் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தது இந்த பேரணி.
ஆனால் திடீரென போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இலக்கு வைத்து போலீசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.இதனிடையே இன்று மதியம் தூத்துக்குடி, அண்ணா நகர் பகுதியில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் காளியப்பன் என்ற இளைஞர் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 3 பெண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். 17 வயது மாணவி முழக்கமிட்டார் என்பதற்காக அவரது வாயை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.