ஸ்டெர்லைட்: மாசடைந்த குமரெட்டியாபுரம் குடிநீரைக் குடித்து மக்களின் போராட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு
ஸ்டெர்லைட் ஆலையால் மாசடைந்த குமரெட்டியாபுரம் குடிநீரைக் குடித்து போராட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட அ.குமரெட்டியாபுரம் கிராமத்தின் குடிநீரைக் குடித்து, போராடி வரும் கிராம மக்களுக்கு தனது ஆதரவை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துகுடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுவதாகக் கூறி ஆலைக்கு அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் , ஆலையை மூடக்கோரி கடந்த 47 நாட்களாக போராடி வருகின்றனர்.
ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் இந்தப் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று அ.குமரெட்டியாபுரம் மக்களை நேரில் சந்தித்தார். அப்போது, அந்த கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடிநீரை பார்வையிட்ட அவர், அதை குடித்து பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார். மத்திய அரசும், மாநில அரசும் இந்த விஷயத்தில் வாய் மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
போபால் விஷவாயு சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த கோர சம்பவத்தின் பாதிப்புகள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. அதுபோல, இந்த கிராமமும் ஆகிவிடக்கூடாது. எனவே இந்த ஆலையை மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.