ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுக- தூத்துக்குடியில் 10 கிராம மக்கள் மாபெரும் மறியல் போராட்டம்!
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் 10 கிராம மக்கள் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் எனப்படும் காப்பர் தொழிற்சாலையால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு புற்றுநோய், குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, இதய பிரச்சினை உள்ளிட்டவை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி குமரரெட்டியாபுரத்தில் கடந்த 57 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் அவர்கள் போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்தனர்.
திரும்பி செல்வோம்
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றதை அடுத்து அங்கு சில்வர்புரம் , சுப்பிரமணியபுரம், மடத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். குறைதீர்ப்பு கூட்டத்துக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தை அந்த மக்கள் முற்றுகையிட்டனர்.
லாரி கண்ணாடி உடைப்பு
பின்னர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை நான்கு வழி சாலையில் சுற்றியுள்ள கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இதைத் தொடர்ந்து அந்த மக்களுடன் ஆட்சியர் வெங்கடேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்களுக்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். எனினும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
போராட்டங்கள் வலுப்பெற்றன
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இதுபோன்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.