ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தூத்துக்குடி கலெக்டரை விரட்டியடிப்போம் என பேசிய ஜோயல் மீது வழக்கு!
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தூத்துக்குடி ஆட்சியரை விரட்டியடிப்போம் என பேசிய திமுக ஜோயல் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
சென்னை: தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் மீது ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. கலெக்டரை அடித்து விரட்டுவோம் என அவர் பேசியதுதான் வழக்குக் காரணம். ' மக்கள் உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறது ஸ்டெர்லைட். அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் துணை போவது குறித்து கேள்வியெழுப்பியதற்காக வழக்குப் பதியப்பட்டிருக்கிறது' என்கின்றனர் தூத்துக்குடி தி.மு.கவினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அம்மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஜோயல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ' தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையால் மாவட்டத்தில் நிலம், நீர், காற்று என அனைத்தும் நஞ்சாக மாறிப்போய் விட்டது. மருத்துவத் துறையின் புள்ளிவிவர ஆய்வுகளின் அடிப்படையில் மாவட்டத்தில் தினமும் ஒருவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வரும் அபாய நிலையும் முடிவில்லாமல் தொடர்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் புதியதாக தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் கொதித்துப்போன தூத்துக்குடி மாவட்ட மக்கள், மாணவர்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாமாகவே முன்வந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலைக்கு மிக அருகிலுள்ள குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊர்களிலேயே ஒன்று கூடி கடந்த சில வாரங்களாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 24-ம் தேதி தூத்துக்குடி மாநகரில் வியாபாரிகள் அனைத்துக் கடைகளையும் 24 மணிநேரமும் அடைத்து பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்துக்காக மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளைத் தூண்டிவிட்டு வணிகர்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் கடைகளில் திடீரென்று தேவையில்லாமல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார். குடிநீர் குடிப்பதற்கு முடியாமல் விஷமாகிவிட்ட நிலையில் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவலியுறுத்தி கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது குழந்தைகள், குடும்பத்தினருடன் கடும் வெயிலில் அமர்ந்து அறவழியில் போராட்டம் மேற்கொண்டுவரும் கிராமமக்களுக்கு பந்தல் அமைக்கவும், அவர்களை பிறபகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் சந்தித்துப் பேசவும் தடைபோட்டு, ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி வரும் மாவட்ட காவல்துறை தனது போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் பஸ் நிலையம், ரயில் நிலையம், விமானநிலையம், அரசு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால் இதனை பொதுமக்களுடன் இணைந்து தி.மு.க. இளைஞர் அணியினரான நாங்களே அதிரடியாக அகற்றிடுவோம்.
மாநகர மேம்பாடு வளர்ச்சி' என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையிடமிருந்து இனிமேல் நிதி பெற்று வளர்ச்சிப் பணிகளைச் செய்யும் முடிவினையும் மாவட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையிடம் கையேந்தும் மாவட்ட ஆட்சியரைக் கண்டிக்கும் வகையில் அவரது இல்லத்தை அதிரடியாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திடுவோம்' எனக் கொந்தளித்திருந்தார். அறிக்கையின் ஓர் இடத்தில், வேதாந்தாவின் கையாளாகச் செயல்படும் தூத்துக்குடி கலெக்டரை விரட்டியடிப்போம்' எனக் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் நேற்று சிப்காட் போலீசார் ஜோயல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 188, 294(சி), 353, 506 (2) உள்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிதிமுறைகளை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், சட்டத்திற்குப் புறம்பாகப் பேசுதல், அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அவதூறாகத் தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்து கலகத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இப்படியொரு அதிரடியை ஜோயல் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. ' மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சியாளரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும்தான் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கலெக்டரின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேடையிலும் பேசினார் ஜோயல். இதற்காக இத்தனை பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. இதனை சட்டரீதியாகவே எதிர்கொள்வோம்' என்கின்றனர்.
'மாவட்ட எம்.எல்.ஏவான கீதா ஜீவனுக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கும் இடையில் உள்ள வர்த்தகம் குறித்து தகவல்கள் வெளியான நிலையில், நேரடியாகக் களமிறங்கினார் ஜோயல். இதில் மாவட்ட உள் அரசியலும் உள்ளது' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.