"ஹேப்பி அடக்க ஒடுக்க நியூ இயர்.." - இளைஞர்களுக்கு தூத்துக்குடி போலீசாரின் எச்சரிக்கை இது
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு எஸ்பி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படைக்கு, மது அருந்துவோரை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதிவேகத்தை அளவிட்டு காட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றை உபயோகிப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி மகேந்திரன் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடிபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவிகள், அதிவேகத்தை அளவிட்டு காட்டும் கருவிகளையும் எஸ்பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை எஸ்பி மகேந்திரன் சந்தித்து பேசினார்.
புத்தாண்டு பிறப்பையொட்டி வருகிற 31ம் தேதி நள்ளிரவு, ஜனவரி 1ம் தேதி மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல்பயணிப்பவர்கள், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மேலும், தேவையற்ற கூட்டம் கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சத்தமிடுதல், பெண்களை கேலி செய்தல், திறந்த வெளியில் மது அருந்துதல், சாலையில் பொது மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள இடையூறு செய்பவர்கள் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எஸ்.பி. தெரிவித்தார்.
முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக அதிகமான சத்தத்தில் வெடி வைத்தல், கூம்பு வடிவ ஓலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி.மகேந்திரன் கூறினார்.