வெடித்தது ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி- 7 கிராமங்களில் மக்கள் போராட்டம்- அரசுக்கு கெடு!
Recommended Video
சென்னை: நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியை சுற்றிய கிராமங்களில் வெடித்திருக்கிறது. அ.குமரெட்டியாபுரத்தில் தொடங்கிய போராட்டம் 7 கிராமங்களில் தற்போது நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட நாளை மாலை வரை அரசுக்கு கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.
தூத்துக்குடி சுற்றி வட்டார கிராமங்களில் நிலம், நீர், காற்று என அனைத்தையும் நச்சாக்கி நாசப்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. வேதாந்தா குழுமத்தின் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 54 நாட்களுக்கு முன்னர் குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டம் தொடங்கியது. இப்போது மீளவிட்டான், தெற்கு பாண்டியாபுரம் என மொத்தம் 7 கிராமங்களில் ஸ்டெர்லைட்டை ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் தூத்துக்குடி மாணவ மாணவியரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை நாளை மாலைக்குள் அரசு வெளியிட வேண்டும் என குமரெட்டியாபுரம் மக்கள் கெடு விதித்துள்ளனர்.
அரசு அப்படி அறிவிப்பை வெளியிடவில்லை எனில் இனி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் தொடர் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.