தூத்துக்குடியிலும் காலா... ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தி விட்டு ரசிகர்கள் ஆடிப் பாடி கொண்டாட்டம்!
திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி: காலா திரைப்பட காட்சி துவங்கும்முன்பு தூத்துக்குடி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடுகுறித்து ஆறுதல் தெரிவிக்கபோது ரஜினி கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை தமிழகமெங்கும் உண்டாக்கியது. ரஜினியின் காலா படத்தில் போராட்ட காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், எதற்கெடுத்தாலும் தமிழக போராட்டம் செய்வது சரியல்ல என்று கூறியிருந்தது ரஜினிக்கு எதிர்ப்பலைகளை தேடி கொடுத்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படம் காசிக்கடை பஜாரில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்டது. மற்ற மாவட்டங்களில் அதிகாலை 3 மணி, 4 மணி என்று ஒளிபரப்பப்பட்ட நிலையில் இங்கு காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் காலையிலேயே அந்த தியேட்டரின் முன் குவிந்திருந்தனர்.
பின்னர் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு ஒவ்வொருவராக தங்கள் இருக்கைகளில் அமைதியாக சத்தமின்றி அமர்ந்தனர். படம் திரையிடப்படுவதற்கு முன்பாக, ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரையின் அருகில் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அனைத்து ரசிகர்களும் தங்கள் இருக்கையிலிருந்து திடீரென எழுந்து நின்றனர். அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். தியேட்டரே நிசப்தமானது.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர், 'காலா' படம் திரையிடப்பட்டது. அதன்பின் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கண்டு களித்தனர்.