தூத்துக்குடி பலி எண்ணிக்கை 10: தலைமை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலாளரை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகளுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10-ஆக எட்டியுள்ளதையடுத்து, திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை நடைபெற்ற தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது நடத்திய தடியடி கண்டிக்கத்தக்கது என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் போராட்டம் நடத்திய மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அரசு தீர்வு கண்டிருக்க வேண்டும் என்றும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது என்றும் ஸ்டாலின் தனது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், துப்பாக்கி சூட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை 17 வயது மாணவி உட்பட 10 ஆக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது குறித்தும், தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானது குறித்தும், தலைமை செயலாளருடன் ஸ்டாலின் விரிவாக பேசியதாக தெரிகிறது. வன்முறை களத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தலைமைசெயலாளருடன் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.