துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம்: தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!
துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக காலவரையற்ற கடையடைப்பு நடத்த தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியானதை அடுத்து, தகுந்த நியாயம் கிடைக்கும் வரை காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 100வது நாளை எட்டியது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டி பேரணி செல்ல அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில், போலீஸாரின் தடையையும் மீறி நேற்று காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகினர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்கும் வரை காலவரையற்ற முழுக்கடையடைப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள் குதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.