ஸ்டெர்லைட் ஆலையில் வல்லுநர் குழு தீவிர ஆய்வு.. பெருமளவில் போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2-வது நாளாக நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்துள்ள வல்லுனர் குழு இன்று 2 வது நாளாக ஆலையின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இழுத்து மூடப்பட்டது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மக்களின் தன் எழுச்சி போராட்டம் காரனமாக கடந்த மே மாதம் 28 ம் தேதி இழுத்து மூடப்பட்டது. எனவே ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடா்ந்தது.
மூவர் குழு
இதனால் ஸ்டெர்லைட் ஆலையினை ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது .
நேரில் ஆய்வு
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலையிலான மூன்று பேர் கொண்ட வல்லுனர் குழுவானது நேற்று தூத்துக்குடி வந்தது. அங்கு ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்படும் உப்பாற்று ஓடை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் குழுமியிருந்தனர். இதனையடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் ஆலையின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.
மக்கள் கருத்து
இதனிடையே, ஸ்டெர்லைட் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் எதுவானாலும் தயக்கமின்றி கூறலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்றைய ஆய்வு முடிந்தபின்னர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களிடம் குறைகளும் கேட்டறியப்படுகிறது. இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.