தொடர் போராட்டங்கள் எதிரொலி: பராமரிப்பு பணிக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடல்
பெரும் சர்ச்சைக்குள்ளான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: பெரும் சர்ச்சைக்குள்ளான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாணவர்களும் போராட்ட களம் புகுந்துள்ளனர். கடந்த 45 நாட்களாக போராடி வரும் குமரெட்டியாபுரம் மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதியிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் நடமாடும் மருத்துவ உதவி மைய வாகனம் அவ்வப்போது கிராம பகுதிகளுக்கு சென்று நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறது. நேற்று முன்தினம் அந்த மருத்துவ வாகனம் அத்திமரப்பட்டி பகுதிக்கு சென்றது. அங்கு வாகனத்தை விவசாயிகள் தடுத்து நிறுத்தி அதில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ விளக்க பேனர்களை கிழித்தனர்.
குஷி பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகேயுள்ள அத்திமரப்பட்டியில் ஸ்டெர்லைட் சார்பில் ‘குஷி' என்ற பெயரில் அமைக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அத்திமரப்பட்டி கிராம மக்கள் நேற்று அந்த குழந்தைகள் மையத்துக்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குழந்தைகளை அனுப்ப மாட்டோம்
பின்னர், குழந்தைகள் மையத்தை திடீரென இழுத்து மூடி பூட்டு போட்டனர். குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றதோடு இனி இம்மையத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்றனர்.
கையெழுத்து பெறும் இயக்கம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தையும் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 4ம் தேதி ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
15 நாட்களுக்கு மூடல்
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளை தொடர்ந்து வரும் ஏப்ரல் 10ஆம் தேதிதான் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.