தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த பேரணியில், கலவரம் வெடித்ததால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளதால், பேரணி நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர்.
பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவு பிறப்பித்ததையும் மீறி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதால் அவர்களை சமாளிக்க முடியாத காவல்துறை பின்வாங்கியது.
இதனையடுத்து, போராட்டக்காரார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சூறையாடினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீவைத்தனர்.
இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் படுகாயமடைந்தனர், ஒருவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பலியானார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போராட்டம் தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளதால், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.