போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 9 பேர்.. பலர் படுகாயம்.. பெரும் சோகத்தில் தூத்துக்குடி!
தூத்துக்குடியில் போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று 100வது நாள் போராட்டத்தை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஓட்டம் பிடித்த போலீசார்
இதையடுத்து காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்ததால் போலீசார் ஓட்டம் பிடித்தனர்.
3 முறை துப்பாக்கிச்சூடு
இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்
இந்நிலையில் தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் மேட்டுப்பட்டி கிளாஸ்டன் (40), தூத்துக்குடி கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவி பலி
இந்த துப்பாக்கிச்சூட்டின் கொடூர சம்பவமாக போராட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த வெனிஸ்டா என்ற 10ஆம் வகுப்பு மாணவியும் கொல்லப்பட்டுள்ளார். வாயில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அந்தோனி செல்வராஜ் என்பவரும் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகியுள்ளனர். வினிதா (29) என்ற பெண்ணும் உயிரிழந்தார்.
பலர் மருத்துவமனையில்
2-வது மற்றும் 3-வது முறை போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனிடையே நடைபெற்ற தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாளை பிரேதபரிசோதனை
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது இல்லை. ஒரே நாளில் 9 பேர் போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியிருப்பது தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.