எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் அதிருப்தியா? டிடிவி தினகரன் விளக்கம்
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் அணி மாறவுள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை: பெருந்துறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் இன்று நடைபெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஓபிஎஸ் அணிக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்ததும், முதல்வராக பொறுப்பேற்க சசிகலா காய் நகர்த்தினார்.
இதனையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலாவிற்கு எதிராக குரல் எழுப்பினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் கட்சி இரண்டாக பிளவு பட்டது. கூவத்தூரில் 122 எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர். ஓபிஎஸ் அணியில் பல எம்எல்ஏக்கள் இணைந்தனர். எம்பிக்களும் இணைந்து ஆதரவு தெரிவித்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து, சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மூத்த நிர்வாகி பொன்னையன் உள்பட பலர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். இதுவரை பன்னீர்செல்வம் அணிக்கு அவர் உள்பட 12 எம்எல்ஏக்கள் ஆதரவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் ஆதரவும் உள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஓபிஎஸ் அணிக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறினார். இதனால் தோப்பு வெங்கடாசலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தினகரன்.