எடப்பாடிக்கு எதிராக கலக குரல்- சட்டசபை அவை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தோப்பு!
சட்டசபை அவை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம்.
சென்னை: அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் சட்டசபை அவை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தோப்பு வெங்கடாசலம்.
அதிமுகவையும் ஆட்சியையும் எடப்பாடி தலைமையிலான கொங்கு அமைச்சர்கள் கைப்பற்றியுள்ளனர். அதேநேரத்தில் தோப்பு வெங்கடாசலம், கரூர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரும் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என கலகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த நிலையில் அமைச்சரவையை மாற்றி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சர்கள் 2 பேரை நீக்கிவிட்டு ஓபிஎஸ் அணியில் 2 பேருக்கு அமைச்சர் பதவி தரப்படுகிறதாம்.
இதனால் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் சட்டசபைஅவை குழு உறுப்பினர் பதவியை இன்று தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் எடப்பாடிக்கு எதிர்ப்பை காண்பிக்கும் நாடகங்களை அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளிப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.