அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை கூட்டுமாறு எடப்பாடியிடம் தோப்பு கோஷ்டி கோரிக்கை
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தோப்பு வெங்கடாசலம் அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: அதிமுக அம்மா அணியில் நீடித்து வரும் உள்கட்சி பிரச்சினையை தீர்க்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பின் பேரில் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்எல்ஏ-க்கள் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தனர். அப்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை உடனே கூடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகஇரு அணிகளாக பிளவுபட்டது. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று பன்னீர் செல்வம் அணி. இந்நிலையில் சசிகலா முதல்வராவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த போது எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ் அணியினரோ , எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்ற பீதியில் சசிகலா இருந்தார்.
அப்போது 122 எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் கிட்டதட்ட வீட்டுக் காவலில் வைப்பது போன்று வைத்து விட்டார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களுக்கு பணம், தங்கம், கார் உள்ளிட்ட கனவிலும் கிடைக்காத பரிசு பொருள்கள் கிடைக்கும் என்று பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.
சிறையில் சசிகலா, தினகரன்
இந்நிலையில் சசிகலா கூவத்தூர் கூத்துகள் அரங்கேறும்போதை சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது முதல்வர் கனவு தகர்த்தெறியப்பட்டது. மேலும் முதல்வர் கனவில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தினகரனோ, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பேரம் என்னாச்சு
தங்களுக்கு ஆசை வார்த்தை கூறி கூவத்தூரில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் அதிமுகவில் தோப்பு கே. வெங்கடாசலம் தலைமையில் புதிய அணி உதயமாவதற்காக ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் கடந்த 17- ஆம் தேதி எம்எல்ஏ விடுதியில் நடைபெற்ற 11 எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
என்ன விவாதம்?
ரகசிய கூட்டத்தில் கூவத்தூர் பேரங்கள் வழங்கப்படவில்லை என்றும், எம்எல்ஏ தொகுதி நிதியை பயன்படுத்த முடியவில்லை என்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த பாண்டியராஜன், ஓபிஎஸ் அணிக்கு சென்றதால் அவரது அமைச்சர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மற்ற அமைச்சரவை இன்னும் மாற்றப்படாமல் உள்ளது என்ற அதிருப்தியை தோப்பு அணியினர் வெளிப்படுத்தினர்.
ஆட்டம் கண்டுள்ள அரசு
சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மை பலம் இழக்கும் என்று கூறப்படுவதாலும் பல்வேறு அதிருப்திகள் நிலவுவதாலும், உள்கட்சி பூசல்கள் நடப்பதாலும் தமிழக அரசு ஆட்டம் கண்டுள்ளது. எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு விலை பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடத்த சட்டசபை அடுத்த மாதம் கூட்டவுள்ள நிலையில் தனித்தனி கோஷ்டிகளை ஒன்றாக்கு்ம முயற்சியில் எடப்பாடி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தலைமை செயலகத்துக்கு அழைப்பு
தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதன் பேரில் அவர்கள் தலைமை செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது அதிமுக எம்எல்ஏ- க்கள் கூட்டத்தை கூட்டுமாறு தோப்பு கோஷ்டியினர் வலியுறுத்தினர்.