அதிருப்தி எம்எல்ஏக்கள், தினகரனிடம் முதல்வர் பேச வேண்டும்..தோப்பு வெங்கடாச்சலம் திடீர் தூது!
அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்து முதல்வர், துணை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
பெருந்துறை : தினகரன் ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை அழைத்து முதல்வரும், துணை முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
டிடிவி. தினகரன் அணியை சேர்ந்தவராக கருதப்பட்ட பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதா அதிமுகவில் எனக்கு பல்வேறு பொறுப்புகளையும், 2 முறை அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தவர். கல்லூரி பருவத்தில் இருந்தே கட்சியில் நான் செயல்பட்டு வருகிறேன்.
அதிமுக என்பது என் ரத்தில் ஊறியது, ஜெயலலிதா பல்வேறு திட்டங்கள் மூலம் 100 ஆண்டுகள் இந்தியாவை தமிழகத்தின் தலைசிறந்த மாநிலமாக வளர்ப்பார் என்று நினைத்தோம். ஆனால் திடீர் உடல்நலக்குறைவால் அவர் இன்று நம்மிடையே இல்லை. ஒரு பெரிய தலைவர் மறைந்த பிறகு கட்சி பிளவுபடுவதும் பின்னர் சேர்வதும் புதிததல்ல, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை ஒன்று சேர்த்தவர் ஜெயலலிதா.
100 ஆண்டுகாலம் ஆட்சி தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பம். எனவே அரசு தொடர்ந்து 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் தொண்டர்கள், மக்களின் கருத்து. ஜெயலலிதாவின் எண்ணங்களை ஈடு செய்யும் கடமை அனைவருக்கும் உள்ளது, எனவே அதிமுக தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்.
அழைத்து பேச வேண்டும்
ஆளுநர் மாளிகையில் மனு கொடுத்தவர்கள், அன்று கூவத்தூரில் தங்கி இந்த ஆட்சிக்காக வாக்களித்தவர்கள் தற்போது எதிர்க்கின்றனர். அவர்கள் மனதில் என்ன பாரம் இருக்கிறது என்று அவர்களை அழைத்து பேசி, களைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 135 சட்டசபை உறுப்பினர்களை கொண்டு அமைந்தது தான் அதிமுக அரசு
முதல்வரின் கடமை
இடையில் 3 அணியாக பிரிந்து செயல்படும் சூழல் ஏற்பட்டது. 4 நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து பேசி ஒரு அணியை இணைத்துவிட்டனர். அதிமுக ஒரு குடும்பம் என்று அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள், எனவே 19 எம்எல்ஏக்கள்
ஆட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை ஆட்சியை வழிநடத்திச் செல்பவர்களுக்கும் உள்ளது.
எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை
தற்போதைய சூழலில் முதல்வர், துணை முதல்வர் இருவரும் 19 எம்எல்ஏக்களை அழைத்து பேச வேண்டும். அதிமுக அரசு அருதிப் பெரும்பான்மையை பெற அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவும் தேவை.
தினகரனுடனும் பேச வேண்டும்
தாய் மனதோடு முதல்வர் பழனிசாமி அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை பிள்ளைகளை போல நினைத்து அழைத்து பேச வேண்டும். ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் இவர்கள், எனவே அவர்களின் மனக்குறையை போக்கி ஒற்றுமையோடு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தினகரனையும் அழைத்து பேச வேண்டும்.
ஏன் ஆளுநரை சந்திக்க செல்லவில்லை?
ஆட்சிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆளுநரை சந்திக்க நான் செல்லவில்லை. எதிர்ப்பு கடிதமும் கொடுக்கவில்லை, நான் எந்த அணியிலும் இல்லை, இந்த இக்கட்டான சூழலில் அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றுபட்டு கட்சியை தொடர்ந்து வழிநடத்தி செல்ல வேண்டும்.