2 நாளில் அடுத்த அணுகுண்டு.. தயாராகும் தோப்பு கோஷ்டி. பீதியில் எடப்பாடி அன்ட் கோ!
பொதுவாக காங்கிரஸில்தான் கோஷ்டிகள் அதிகம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதிமுகவில் அலை அலையாக கோஷ்டிகள் குவிந்து கொண்டுள்ளன.
சென்னை: அதிமுகவில் புதிதாக உருவாகியுள்ள தோப்பு வெங்கடாசலம் கோஷ்டியினர் இன்னும் 2 நாட்களில் தங்களது செயல்பாடுகளை பகிரங்கப்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. அவர்கள் எந்த மாதிரியான குடைச்சலை தருவார்களோ என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அணியினரும் பீதியில் உள்ளனர்.
ஜெயலலிதா இருந்தவரை அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அதிமுகவை தற்போது அக்குவேறு ஆணிவேறாக ஆளாளுக்கு பிரித்து கொண்டு வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று 4 மாதங்கள் கூட நிலைக்கவில்லை. அதற்குள் அவர் உடல்நலக் குறைபாடுகளால் மறைந்தார்.
ஓபிஎஸ் பதவியேற்பு
இந்நிலையில் அவர் மறைந்த அன்றைய இரவே கட்சியினர் ஒன்று கூடி பேசி ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கினர். அதைத் தொடர்ந்து அவரையும் 3 மாதங்கள் கூட நிலைக்க விடாமல் சசிகலா பதவிக்காக விரட்டியடித்தார். எனினும் சொத்துக் குவிப்பு வழக்கினால் அவரது ஆசை நிராசையாக போய்விட்டது.
எடப்பாடி முதல்வரானார்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் சசிகலாவின் ஆலோசனையின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரது நாற்காலியும் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் எடப்பாடியின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் யார் செய்த புண்ணியமோ அப்படி ஒன்று நடக்காமல் தன் தலையில் தானே மண் வாரி போட்டு கொண்டார் தினகரன்.
அதிமுக இணைப்பு
அடுத்தபடியாக அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையின் போது ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை கேட்டு வருகிறார் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் தினகரன் தலைமையில் தனி அணியும் செயல்பட்டு வந்தது. இதனால் மீண்டும் கூவத்தூர் கூத்துகள் அரங்கேறி எம்எல்ஏ-க்கள் விலைபேசப்படுவரோ என்று எடப்பாடி வயிற்றில் புளி கரைத்தது. ஆனால் இரட்டை இலை சின்ன பேர விவகாரம் தொடர்பாக தினகரன் திகார் சிறைக்குப் போய் விட்டார்.
பல அணிகள்
இதன் பின்னர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் தனி அணியாக செயல்பட்டு ரகசிய கூட்டங்களை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும் எடப்பாடி அணியினர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 13 எம்எல்ஏ-க்கள் தனி அணியாக செயல்படுவதற்காக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாக புது தகவல்கள் கசிந்தன. இவர்கள் இன்னும் ஓரிரு நாளில் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிகிறது.
எடப்பாடி அண்ட் கோ பகீர்
இதை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு பீதி கிளம்பியுள்ளது. மொத்தம் 122 எம்எல்ஏ-க்களைக் கொண்ட அதிமுக அம்மா கட்சியில் 13 பேர் தனித்து செயல்பட்டால் மீதமுள்ள 109 எம்எல்ஏ-க்களைக் கொண்டு ஆட்சியை நடத்த முடியாது. அதாவது 117 எம்எல்ஏ பலம் இருந்தால்தான் ஆட்சியை நடத்த முடியும்.
டப்பா டான்ஸ் ஆடும்
மேலும் ஓரிரு அதிருப்தி எம்எல்ஏ-க்களும் விலகிக் கொண்டால் எடப்பாடியின் டப்பா டான்ஸ் ஆடிவிடும். இதனால் எந்த நேரத்தில் என்ன அறிவிப்பு வருமோ என்று பீதியில் உள்ளனர் எடப்பாடி அணியினர். இந்த 13 பேரும் ஓபிஎஸ் அணியில் இணைய போகிறார்களா? அல்லது ஓபிஎஸ் அணியின் 12 எம்எல்ஏ-க்களை போல் தனித்து இயங்க போகிறார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.