தூத்துக்குடியில் போலீஸார் கைது செய்த 65 பேரும் விடுதலை.. நீதிபதி சுகாசினி அதிரடி உத்தரவு
கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலை செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது போராட்டக்கார்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் பொதுமக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
பல்வேறு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டன. இதேபோல, தூத்துக்குடியில் நேற்றும் பதற்றம் நீடித்த நிலையில் பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி குற்றவியல் 1-வது நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலை செய்ய மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுகாசினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.