தெருக்கள் உள்ளன.. புழுதிகளும் கொட்டிக் கிடக்கின்றன.. அப்பிக் கொள்ளத்தான் குழந்தைகள் இல்லை!
சென்னை: முன்பெல்லாம் நம் கண் முன்பாக தெருக்கள் தோறும் குழந்தைகளின் சத்தம் காதைப் பிளக்கும். சடுகுடு, கபடி, கிட்டிப் புல், கோலி குண்டு என்று விதம் விதமாக விளையாடுவார்கள். உடம்பெல்லாம் புழுதி அப்ப ஓடி வருவார்கள் வீட்டுக்கும்.
பாட்டி மார்களும், தாத்தாக்களும் அட ஏண்டா இப்படி புழுதியை வாரிட்டு வர்றே என்று திட்டாத நாள் இருக்காது. பெண் பிள்ளைகளுக்கும் ஏகப்பட்ட விளையாட்டுகள் இருக்கும். தாயம், பாண்டி, பச்சைக் குதிரை, ஒளிந்து விளையாடுவது என.. ஆனால் இன்று சாலைகளில் புழுதி இருக்கிறது.. ஆனால் அப்பிக் கொள்ளத்தான் பிள்ளைகளைக் காணவில்லை. அந்த அளவுக்கு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்.
சின்ன சின்ன சொப்புச் சாமான்களைப் பிள்ளைகள் விளையாடிய காலங்கள் போய் இன்று ஆன்லைன் விளையாட்டுகளில் நேரம் செலவிடுகின்றனர். நிலவைக் காட்டி குழந்தையின் பசியாற்றியது அந்தக் காலம். கைப்பேசியைக் காட்டி குழந்தையின் பசியாற்றுவது இந்தக்காலம்.
பந்து விளையாட்டு
பழங்காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பந்துத் தூக்கிப் போட்டு விளையாடுவது கொல கொலயா முந்திரிக்கா கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடினோம். ஆனால் இன்றைய தலைமுறையினர் ஆன்லைன் கேம்களில் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் மொபைலை கொடுத்து விட்டுத் தங்கள் வேலைகளில் மூழ்கிவிடுகின்றனர். குழந்தை மொபைலில் உள்ள விளையாட்டை ஒரு முறை விளையாடிப் பார்க்கிறது பின் அதுவே தொடர்ச்சியாகிறது. இதனால் குழந்தையின் செயல்திறன் பாதிப்படைகிறது.
பப்ஜி ஆதிக்கம்
பதின்வயதினர் பப்ஜி ப்ளூவேல் போன்ற கேம்களை விளையாடுகின்றனர். அதில் கூறும் விதிமுறைகளைப் பின்பற்றுகிறேன் என்று விளையாடி இறுதியில் தற்கொலை வரைச் செல்கின்றனர். ப்ளூவேல் விளையாட்டை விளையாடி பல பேர் உயிரிழந்துள்ளனர். பப்ஜி விளையாட்டில் முதலில் விளையாடுபவரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பிறகு எதிரியை எப்படி கையாள்வது எப்படி அழிப்பது என்று யோசிக்கத் தொடங்கி இறுதியில் பழி வாங்கும் எண்ணம் மேலோங்குகிறது.
ஆன்லைன் போதை
ஆன்லைன் விளையாட்டுகள் போதைப் பொருட்கள் போன்றவை. ஒரு முறை விளையாட ஆரம்பித்து விட்டால் மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டி இறுதியில் ஆளையே அழித்து விடும் அபாயம் கொண்டவை. ஒரு நாள் உங்கள் குழந்தை ஆன்லைன் கேம் விளையாடவில்லை என்றால் கோபப்படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். பெற்றோர்களும் நீ இந்த வேலையைச் செய் பிறகு செல்போன் தருகிறேன் என்று கூறி வேலை முடிந்தவுடன் செல்போனைக் கொடுத்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. உங்கள் குழந்தையின் ஆற்றலையும் செயல்திறனையும் இந்த ஆன்லைன் கேம்கள் அழித்து விடுகிறது.
செல்போனை விடுங்கள்
பெற்றோர்களே நீங்கள் உங்கள் குழந்தை வீட்டில் இருக்கும் நேரத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். செல்போனில் விளையாடாமல் நீங்கள் உங்கள் குழந்தைகளோடு பந்து விளையாடுங்கள். கண்ணாமூச்சி ஓடிப் பிடித்து விளையாடுவது கோலி அடிப்பது கிட்டிப்புல் போன்ற விளையாட்டுகளைக் கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தை செல்போனில் கேம் விளையாட ஆரம்பித்தால் உடனே கண்டியுங்கள். ஆரம்பத்தில் கண்டிக்காவிட்டால் பிறகு அதிலிருந்து உங்கள் குழந்தையை மீட்பது மிகவும் சிரமம்.
கவனச் சிதறல்
படிக்கும் நேரத்தை எல்லாம் ஆன்லைன் விளையாட்டுகளுக்குச் செலவிட்டால் தேர்வில் மதிப்பெண் குறைந்து விடும். இரவு அதிக நேரம் பிள்ளைகள் இந்த விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதனால் தூக்கமின்மை கவனச்சிதறல் கற்றலில் குறைபாடு போன்றவற்றால் குழந்தைகள் அவதிப்படுவார்கள். மூளையை வளர்க்கும் செஸ் விளையாட்டைச் சொல்லிக் கொடுங்கள். ஓடி விளையாடு பாப்பா என்று முண்டாசுக் கவிஞன் கூறியது போல் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நண்பர்களுடன் குழந்தைகளை மைதானத்தில் விளையாட விடுங்கள்.
கண் பார்வை குறையும்
செல்போனில் விளையாடும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடும் கண் பார்வைக் குறைபாடும் ஏற்படுகிறது. கைகளுக்கு வலு சேர்க்கும் பல்லாங்குழி தாயம் ஆடு புலி ஆட்டம் போன்ற விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். விதை விதைத்தவன் விதை அறுப்பான் என்பார்கள். நம் பிள்ளைகள் கண்ணாடிப் போன்றவர்கள். நாம் அவர்களிடம் எதை விதைக்கிறோமோ அதன் பயன் தான் நமக்குக் கிடைக்கும்.
உளைச்சல்தான் வரும்
ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். என் குழந்தை மிகவும் சுட்டி என்றுச் சொல்லும் பெற்றோர்களாக நீங்கள். அப்போது உங்கள் குழந்தைகள் தான் இது போன்ற விளையாட்டுகளில் உங்கள் குழந்தையின் ஆர்வம்அதிகரிக்கும். அதனால் விளையாட்டு விபரீதம் ஆவதற்கும் வாய்ப்புண்டு.ஓடியாடி துள்ளித் திரியும் வயதில் உங்கள் குழந்தைகள் இது போன்ற ஆன்லைன் கேம்களின் மூலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டுமா என சிந்தியுங்கள் பெற்றோர்களே.